குட்கா முறைகேடு வழக்கை தாமதப்படுத்துவதா? சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக வழக்கை விசாரித்து வரும் சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகாரில் டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி , சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022 நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்ய குற்றப்பத்திரிகையை சிபிஐயிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், இன்னும் இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறிவருவதாக அதிருப்தி தெரிவித்து, விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post குட்கா முறைகேடு வழக்கை தாமதப்படுத்துவதா? சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: