தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கல்பாக்கத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்குவது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பாவினி நிறுவனம் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலைக்கு எரிபொருள் நிரம்பும் திட்டத்தை பிரதமர் இன்று (04.03.2024) தொடக்கி வைக்கிறார். இந்த அணு மின் உற்பத்தியால் இப்பகுதியின் சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்களும், வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அணுமின் உற்பத்தி திட்டத்தால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க போராடி வரும் நிலையில், கல்பாக்கத்தில் ஈனுலை இயக்கத்தை தொடக்கி வைப்பது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியாகும்.

அண்மையில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை தொடர்ந்து இருமுறை சந்தித்த தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வழங்க முன்வராத ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் சுற்று சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஈனுலை இயக்கத்தை தொடங்குவது மக்கள் நலனுக்கு எதிரானது என்பதால் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: