மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்.. தலைமைச் செயலகத்திற்கு செல்போன் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு..!!

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அழைப்பு வந்துள்ளது.

இந்த அழைப்பை அடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மிரட்டல் அழைப்பால் தலைமை செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய்களை கொண்டு வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகம் முழுவதும் அமைச்சர் அறை, பேரவை நடைபெறும் இடங்கள், முக்கிய அறைகள், வாகனங்கள், வெளியே இருக்கக்கூடிய பொருட்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை செய்து வருகிறார்கள்.

சென்னை உதவி ஆணையர் தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மிரட்டல் அழைப்பு உண்மையான தகவலா அல்லது பொய்யான தகவலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்.. தலைமைச் செயலகத்திற்கு செல்போன் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: