அரசு பள்ளியில் உலகதரத்தில் கல்வி!.. அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தமிழக அரசுடன் கை கோர்த்த சிவ் நாடார் பவுண்டேஷன்..!!

சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கிட பள்ளிக்கல்வித் துறைக்கும், சிவ் நாடார்அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சென்னையில் சிவ் நாடார் அறக்கட்டளையால் நிறுவப்படவுள்ள உண்டு உறைவிட பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உலகத்தரம் வாய்ந்த கல்வியை மாணவ / மாணவிகள் பெறுவர். தமிழ்நாட்டில் ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பயின்று சிறந்த கல்வி சூழலையும், கல்வி கற்கும் திறன் மேம்படுவதற்கான பயிற்சியினையும் பெறுவர்.

மாணவிகள் 50% வாய்ப்பு பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மாணவர்கள் தகுதியான உயர்கல்வியை தொடர்ந்து பயின்று வருங்காலங்களில் அறிவுத்திறன்மிக்க இளைஞர்களாக வளர்வதற்கு இவ்வொப்பந்தம் பேருதவியாக இருக்கும். இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சிவநாடார் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக சுந்தர், பேனர்ஜி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் உலகதரத்தில் கல்வி!.. அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தமிழக அரசுடன் கை கோர்த்த சிவ் நாடார் பவுண்டேஷன்..!! appeared first on Dinakaran.

Related Stories: