படாளம் சர்க்கரை ஆலையில் 6385 டன் உற்பத்தி: அதிகாரிகள் தகவல்

மதுராந்தகம்: படாளம் சர்க்கரை ஆலையில் நேற்று வரை 6385 டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் இயங்கி வருகிறது மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை. மிகவும் பழமையான இந்த ஆலை தமிழகத்தின் மிகச் சிறந்த சர்க்கரை ஆலைகளில் ஒன்றாக தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் அரவை சீசன் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் துவங்கி மார்ச் மாதத்தில் நிறைவு பெறும்.

அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இந்த ஆலையில் கரும்பு அரவை மற்றும் சர்க்கரை உற்பத்தி தொடங்கியது. 2023-24ம் ஆண்டுக்கான கரும்பு அரவை இலக்காக 2 லட்சம் டன் கரும்பு அரைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை வரை 96 ஆயிரம் டன் கரும்பு அரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 6385 டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் பதிவு செய்யப்பட்டு கரும்புகள் பயிரிடப்படும் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திண்டிவனம், உத்திரமேரூர், செய்யூர், வானூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெட்டப்பட்ட கரும்புகள் இந்த ஆலைக்கு கொண்டு வரப்படுகின்றன. தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இந்த ஆலை செயல்படும் என ஆலை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post படாளம் சர்க்கரை ஆலையில் 6385 டன் உற்பத்தி: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: