இறையுதவி ஒன்றைத் தவிர வேறு எந்த உதவியும் இல்லாத தனி மரம் போல் நபிகளார் வேதனையில் மூழ்கியிருந்த நேரம் அது. ஒரு நாள் இரவு, நபிகளார் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வானவர் தலைவர் ஜிப்ரீல், இறைத்தூதரிடம் வந்து “இறைவன் உம்மை அழைத்துவரும்படி ஆணையிட்டுள்ளான்” என்றுகூறி, ஒரே இரவில் மக்காவிலிருந்து ஜெருசலம் (பைத்துல் முகத்தஸ்) வந்து, பிறகு அங்கிருந்து ஒளியின் வேகத்தைவிட விரைந்து செல்லும் புராக் எனும் வாகனத்தில் ஏறி விண்ணுலகம் அடைந்தனர்.
பேரண்டத்தில் நடைபெறும் இறைவனின் ஆட்சி, சொர்க்கம், நரகம், பாவ – புண்ணியம் செய்தவர்கள், நரக தண்டனை அனுபவிப்பவர்கள், சொர்க்கப் பூங்காக்களில் மகிழ்ந்திருப்பவர்கள் என்று அனைத்தையும் நேரில் கண்டார் நபிகளார். இறையாற்றலை நேரில் கண்டதால் அவருடைய இதயமும் ஆறுதல் பெற்றது.
இறைத்தூதரின் விண்ணேற்றத்தின்போதுதான் ஐந்து வேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டது. முதலில் ஐம்பது நேரத் தொழுகை கடமை ஆக்கப்பட்டது. பிறகு நபிகளாரின் முறையீட்டை ஏற்று, இறைவன் படிப்படியாகத் தொழுகையின் அளவைக் குறைத்து, “ஐந்து வேளை தொழுதால் போதும்” என்று அருளினான். அப்போது இறைவன், “யார் இந்தக் கட்டளையை ஏற்று ஐவேளைத் தொழுகையை முறையாக நிறைவேற்றுகிறாரோ அவருக்கு ஐம்பது வேளை தொழுத நன்மைகளை அருள்வேன்” என்று கூறினான். தொழுகை எனும் மிக உயர்ந்த பரிசுடன் அதே இரவில் நபிகளார் மக்கா திரும்பினார்.
தொகுப்பு: சிராஜுல்ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
“(விண்ணுலகிற்கு எதற்காக அழைத்துச் சென்றான் எனில்) தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக. உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்.”
(குர்ஆன் 17:1)
The post ‘மிஃராஜ்’ எனும் விண்ணேற்றம் appeared first on Dinakaran.