வரி விநியோகத்தில் அநீதி… டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் : பாஜக எம்பிக்களும் பங்கேற்பு

டெல்லி : டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசின் தலையீட்டை கண்டித்து டெல்லியில் கர்நாடக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய பட்ஜெட் குறித்து அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் சித்தராமையா,”வரி விநியோகத்தில் கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அநீதி இழைத்துள்ளது. அதிக வரியை வழங்கும் கர்நாடகாவுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் குறைவாக வரி வழங்கும் வட‌ இந்திய மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளது. வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ஒன்றிய அரசு தென்னிந்திய மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. ​​

உதாரணமாக, உத்தர பிரதேசத்துக்கு சுமார் ரூ.2.18 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ​கர்நாடகாவுக்கு ரூ.44,485 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. கர்நாடகாவை எதிரி மாநிலமாக மத்திய அரசு நினைக்கிறது. இதை கண்டித்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் எனது தலைமையில் ‘டெல்லி சலோ’ போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் கர்நாடகாவை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். பாஜக, மஜத தலைவர்களும், அக்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்,”என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் அறிவிப்பின்படி டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு நிதியை முறைகேடாக பயன்படுவதாகக் கூறி காந்தி சிலை முன்பு பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

The post வரி விநியோகத்தில் அநீதி… டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் : பாஜக எம்பிக்களும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: