3 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று காலை 11.20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர். மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், வருகின்ற 6ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.

டெல்லி செல்லும் ஆளுநர், ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், தற்போது, ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும், இடையே தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வருகிறது. அதோடு அவரது செயல்பாடுகள் குறித்து, நாடாளுமன்றத்திலும் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலும் இருந்து வருகிறது.  இதற்கிடையே ஆளுநர் சொந்த பயணமாகவே டெல்லி செல்கிறார். இது திடீர் பயணம் அல்ல. ஏற்கனவே திட்டமிட்ட பயணம் தான் என்றும் கூறப்படுகிறது.

The post 3 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: