பாலத்தின் மேலே பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும், கீழ்ப்பகுதி பாலத்தில் சைக்கிள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையிலும் இரண்டு அடுக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதற்கு கீழே நெல்லை சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி, திருச்செந்தூர், தென்காசி, செங்கோட்டை செல்லும் ரயில்கள் தங்கு தடையின்றி ரயில் போக்குவரத்தை தொடரும் வகையில் திட்டமிட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் கழித்து கடந்த 2000மாவது ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்தது. இந்தப் பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகும் நிலையில் பாலத்தை சீரமைக்கவும், புதுப்பொலிவு பெறச் செய்யும் வகையிலும் தற்போது ரூ.2 கோடியே 8 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாலத்தின் கைப்பிடி சுவர்கள், சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழ்பாலத்தில் தூண்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி பகுதிகளில் அடிக்கடி சிலர் படுத்து தூங்குவதாக நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் சென்றன. அதிலும் மனநோயாளிகள் ஆபத்தை உணராமல், அதில் படுத்து உறங்குவதால் விபரீதங்கள் நிகழும் அபாயங்களும் காணப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் தூண்களுக்கு இடையிலான இடைவெளி பகுதியில் தடுப்பு பலகைகளை அமைத்தனர். அதில் திருக்குறள்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. கீழ்பாலம் வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்களை திருவள்ளுவர் மேம்பாலத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள திருக்குறள் வரிகள் வெகுவாக கவர்கின்றன.
The post திருவள்ளுவர் மேம்பாலத்தில் இடம் பெற்ற ‘திருக்குறள்’: தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.