×

புற்றீசல் போல் அதிகரிக்கும் போலி டாக்டர்கள், சிகிச்சை மையங்கள்: பக்க விளைவை அறியாமல் ஏமாறும் அப்பாவி மக்கள்

ஒருவர் சராசரியாக 8ம் வகுப்போ, 10ம் வகுப்போ, பிளஸ் 2 படிப்போ அல்லது டிப்ளமோ இன் பார்மஸி உட்பட சார்நிலை மருத்துவ படிப்புகளை முடித்துவிட்டு மருந்துக்கடைகளில் சேல்ஸ் மேனாகவோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் உதவியாளர்களாகவோ பல ஆண்டுகள் வேலை செய்கின்றனர். பின்னர், தங்களுக்கு தெரிந்த மருந்துகள் எந்தெந்த வியாதிகளுக்கு வழங்கப்படுகிறது என்ற அனுபவத்தை கொண்டு தனியாக கிளினிக் நடத்துபவர்களே போலி டாக்டர்கள் என்று அடையாளம் காட்டப்படுகின்றனர். அதேபோல் சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ேஹாமியோபதி, அக்குபஞ்சர் மருத்துவம் பயின்றவர்கள் கூட அலோபதி முறை சிகிச்சை அளிக்கும் அவலம் உள்ளது.

மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும், இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘மருத்துவ சங்கத்தில் போலி டாக்டர்களை கண்டறியும் குழு உள்ளது. எங்களிடம் புகார்கள் வந்தால் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கிறோம். இந்த விஷயத்தில் அரசுடன் ஒத்துழைக்கவும் தயாராக உள்ளோம். எனவே, அரசு எங்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குவதுடன் ஒத்துழைப்பும் வழங்கினால் நிச்சயம் போலி டாக்டர்களை கட்டுப்படுத்துவது அல்ல ஒழிக்க முடியும். அதோடு, மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் மருத்துவ வசதியை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் போலி டாக்டர்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.

பொதுவாக ஸ்டீராய்டு வகை மருந்துகள் அத்தியாவசியமான உயிர்காக்கும் மருந்துகள் ஆகும். நமது உடலிலேயே ஸ்டீராய்டு சுரப்பிகள் உள்ளன. இவைகள் நாம் உடல் உபாதைக்காக எடுத்துக் கொள்ளும் மருந்தை கிரகித்துக் கொள்ள உதவுவது. இந்த ஸ்டீராய்டு வகை மருந்துகளை ஆபத்தான காலங்களிலோ அல்லது அத்தியாவசியமான நேரங்களிலோ நோயாளிகளுக்கு டாக்டர்களால் பயன்படுத்தப்படும். இந்த வகை மருந்துகளை அடையாளம் காண, அந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அந்த மருந்து அட்டைகள் மீதோ அல்லது பெட்டிகள் மீதோ சிவப்பு கோடு போட்டிருக்கும். இந்த மருந்துகளை கண்டிப்பாக டாக்டரின் ஆலோசனைப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாசகம் இடம்பெற்றிருக்கும். உதாரணத்துக்கு, டெக்ஸா மெத்தசோன், குளோரோபெனரமின் போன்ற மருந்துகள். இவைகளை தொடர்ந்து பயன்படுத்தும்போது பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக இவர்கள் நகர்ப்புறங்களில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் இடங்களிலோ, போதுமான மருத்துவ வசதி இல்லாத கிராமப்புறங்களிலோதான் கிளினிக்கை தொடங்குகின்றனர். ஜூரம், தலைவலி, வயிற்றுப்போக்கு, உடல்வலி, மூட்டு வலி என்று சாதாரண வியாதிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு இவர்கள் அளிக்கும் வீரியம்மிக்க மருந்துகளின் தன்மையால் வியாதி உடனே குணமாவதால் கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளுக்கு வரும் நம்பிக்கையே மூலதனமாகும். பெரும்பாலும் சாதாரண பாரசிட்டமால் மாத்திரை சாப்பிட்டாலே குணமாகும் ஜூரம், தலைவலிக்கு கூட அதனுடன் ஸ்டீராய்டு வகை மருந்துகளை கலந்து வழங்குகின்றனர். இதனால் விரைவில் நோய் குணமாவதால் அடுத்தடுத்து இவர்களிடம் கிராமத்தினர் மட்டுமின்றி குறைந்த கட்டணம் என்பதால் அடித்தட்டு மக்களும் அதிகமாக வருகின்றனர். அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் அவர்களுக்கு தெரிவதில்லை.
இதுஒருபுறம் என்றால் குறிப்பிட்ட நகர்ப்புற மருந்து கடைகளும், கிராமப்புற மருந்துக்கடைகளும் கூட கிளினிக்குகளாக மாறி சிகிச்சை அளிப்பதும் மறுபுறம் நடந்து வருகிறது. இதனை மருந்துக்கடைக்காரர்கள் ‘கவுன்டர் சேல்ஸ்’ என்பார்கள். உரிய மூலப்பொருள் அளவு இல்லாத சாதாரண கம்பெனிகளின் மருந்துகளை இவர்கள் தங்களிடம் ஜூரம், உடல்வலி, கால் மூட்டு வலி, காயம் என்று வரும் அப்பாவிகளுக்கு அளித்து பணத்தை பிடுங்கும் வேலையை செய்கின்றனர்.

இந்த வகை போலி டாக்டர்கள் நடமாட்டம் தமிழகம் முழுவதும் நகர்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் பரவலாக அதிகமாக உள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 1 லட்சம் பேர் குறைந்த கல்வித்தகுதியுடன் கிராமங்களில் அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரை ஒட்டியே போலி டாக்டர்களின் அட்டகாசம் குறித்த செய்திகள் அவ்வபோது வெளியாகின்றன. அதிலும் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வது, கருச்சிதைவு செய்வது போன்ற காரியங்களை சட்டவிரோதமாக செய்து சிக்கும் செய்திகள் அதிகம் நாளிதழ்களில் இடம்பிடிக்கின்றன. கிராம மக்களின் விழிப்புணர்வின்மையை பயன்படுத்தி போலியான டாக்டர்கள் புற்றீசல்கள் போல கிராமங்களை நோக்கியே படையெடுக்கிறார்கள். இவர்கள் தங்களது கிளினிக்குகளில் ‘ஆஐஎம்பி’, ‘பிஎம்பி’, ‘எம்எம்பி’, ‘அக்குபஞ்சர் சான்றிதழ்’ போன்ற வற்றை பிரேம் போட்டு பார்வைக்கு வைத்திருப்பர். அந்த சான்றிதழ்களில் குறிப்பிடப்படும் கல்வி நிறுவனங்களின் உண்மை தன்மை என்பது கேள்விக்குறி. கிராமப்புற மக்களின் உயிரோடு விளையாடும் இந்த போலி டாக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

The post புற்றீசல் போல் அதிகரிக்கும் போலி டாக்டர்கள், சிகிச்சை மையங்கள்: பக்க விளைவை அறியாமல் ஏமாறும் அப்பாவி மக்கள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED அண்ணா நகருக்கு திரும்புகிறது அரசு...