×

திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் பெய்த சாரல் மழை

திருவாரூர், டிச. 8: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மீண்டும் பெய்த சாரல் மழை காரணமாக பொது மக்கள் அச்சமடைந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழை பெய்து வந்த நிலையில் மாநில தலைநகரான சென்னையில் கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மாநகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளையும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.

இந்நிலையில் தற்போது கடந்த 2 நாட்களாக சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளனர். மேலும் இந்த வடகிழக்கு பருவமழையானது திருவாரூர் மாவட்டத்திலும் அவ்வப்போது கனமழையாக பெய்து வந்த நிலையில் ஒருசில தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பின்னர் வடிந்தது. அதன்படி கடந்த மாதம் 30ம் தேதி வரையில் இதேபோன்று மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் அதன்பின்னர் கடந்த ஒரு வார காலமாக ஓய்ந்தது.

இதற்கிடையே மாவட்டத்தில் ஒருசில தினங்கள் வெயில் அடித்ததன் காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரையில் வானம் வழக்கம் போல் காணப்பட்ட நிலையில் அதன்பின்னர் மேக மூட்டம் ஏற்பட்டு திருவாரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்தது. இதன்காரணமாக மீண்டும் கனமழை பெய்யுமோ என்று பொது மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் பெய்த சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 18, 19ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து