மணமேல்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்: முதல் 3 இடங்களை பிடித்த உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கல்

 

அறந்தாங்கி,நவ.19: அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில் மாமன்னர் மருது பாண்டியர் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அகமுடையார் நலச்சங்கத்தின் சார்பில் 6ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மாமன்னர் மருது பாண்டியர் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அகமுடையார் நலச்சங்கத்தினரால் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியில் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

போட்டியில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டிகள் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக்குதித்து, இலக்கை நோக்கி, ஒன்றையொன்று முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி ஜோடிகளையும், அதனை ஓட்டி வந்தவர்களையும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

மேலும் இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் ரொக்கப்பரிசும், சிறப்பு பரிசுகள், தட்டு வண்டி, எல்இடி டிவி, பிரிட்ஜ் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாட்டின் உரிமையாளருக்கும் மாட்டை ஓட்டி வந்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மணமேல்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post மணமேல்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்: முதல் 3 இடங்களை பிடித்த உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: