மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அடிகளார் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை


மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளார், கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், சித்தர் பீடம் அருகே புற்று மண்டபத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில், கடந்த ஒரு மாதமாக பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிக இயக்கத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு நேற்று மாலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர்.

பின்னர் இருவரும் பங்காரு அடிகளாரின் நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஆதிபராசக்தி அம்மனை தரிசித்து, சித்தர் பீடத்தை வலம் வந்தனர். அமைச்சர்களை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அமைச்சர்களுக்கு சித்தர் பீடத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதி, செயல் அலுவலர் மேகவண்ணன் மற்றும் ஆன்மிக இயக்க மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அடிகளார் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: