சுரண்டை,நவ.11: சுரண்டை செண்பக கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரண்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுரண்டை நகராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு), பொறியாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கணக்காளர் முருகன் கூட்டத் தீர்மானங்களை வாசித்தார். பெரும்பான்மையான கவுன்சிலர்கள் சுரண்டை செண்பககால்வாயை சீரமைக்க வேண்டும், இரவு நேரங்களில் செண்பக கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை நேரம் என்பதால் சாலைகளை சீரமைத்து, தண்ணீர் தேங்காதபடி முன்னேற்பாடுகளை செய்து வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு பகுதியிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பதில் அளித்து பேசிய சேர்மன் வள்ளி முருகன், ‘சுரண்டை செண்பக கால்வாயை சீரமைத்து மேம்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நகராட்சி முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது’ என்றார்.
The post சுரண்டை நகராட்சி கூட்டம் செண்பக கால்வாயை சீரமைக்க வேண்டும்; கவுன்சிலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.