ஆண்டிபட்டி பகவதி அம்மன் கோயிலில் விஜயதசமி திருவிழா கோலாகலம்

ஆண்டிபட்டி, அக். 25: ஆண்டிபட்டி நகரில் உள்ள பாப்பம்மாபுரம் பகவதி அம்மன் கோயிலில் விஜயதசமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பகவதி அம்மன் உற்சவ மூர்த்திக்கு ராஜராஜேஸ்வரி, மீனாட்சி அம்மன், லலிதாம்பிகை, அலமேலு மங்கை, கஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, ஆண்டாள், பாலா திரிபுரசுந்தரி, வாணி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜை நடந்து, மகிஷாசுர மர்த்தினி வதம் செய்யப்பட்டு, அம்மனுக்கு ஹோமத்துடன் பாலாபிஷேகம் செய்து விசேஷ பூஜை செய்து வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து சிறு குழந்தைகள் கல்வி பயிலும் தொடக்கமாக பச்சரிசியில் தமிழ் எழுத்தின் உயிரெழுத்தின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்து அவர்களது கல்வி மென்மேலும் வளர வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழாவை பகவதி அம்மன் கோயில் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post ஆண்டிபட்டி பகவதி அம்மன் கோயிலில் விஜயதசமி திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: