ராஜபாளையம், அக்.8: ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் போதைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ராஜபாளையம், போக்குவரத்துக்காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இன்றைய நாளில் மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை அறியாமல் ஓட்டுநர் உரிமம் பெறாமல், தலைக்கவசம் அணியாமல் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகப் பயணிக்கின்றனர்.
இதனால் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன என்று பேசினார். அவரை தொடர்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன், மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு ஆட்படாமலும், செல்பேசிகளைச் சரியான முறையில் மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும், பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்தல், மாணவர்கள் தங்களுக்குள் கோஷ்டி மோதல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும், உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்தான் உள்ளது என்று பேசினார்.
மேலும், கூட்டத்தில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால், சீனிகுருசாமி, பட்டதாரி உதவித்தலைமையாசிரியர் இளையபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், 10 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர். நிறைவாக உதவித் தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
The post ராஜபாளையம் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.
