கர்நாடக மாநில முழு அடைப்பு காரணமாக 2 பெங்களூரு விமானங்கள் ரத்து

சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, நேற்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் சென்னையில் இருந்து, பெங்களூரு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. எனவே, நேற்று சென்னை விமான நிலையத்தில், பெங்களூரு செல்ல வேண்டிய 2 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன. காலை 9.30 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், காலை 1.10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பகல் 12.15 மணிக்கு பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டன. இந்த இரு விமானங்களில் முன்பதிவு செய்திருந்த குறைந்த அளவு பயணிகளின் டிக்கெட்டுகள், வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த இரண்டு விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டாலும், சென்னை- பெங்களூரு- சென்னை இடையே இயக்கப்படும் 18 விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆனால் அந்த விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post கர்நாடக மாநில முழு அடைப்பு காரணமாக 2 பெங்களூரு விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: