சைனீஸ் வகை காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி : நீலகிரியில் சைனீஸ் வகை காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக பெரும்பாலான விவசாயிகள் மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு கேரட், உருளைக்கிழங்கு,பீட்ரூட்,முட்டைகோஸ்,முள்ளங்கி,பீன்ஸ்,பூண்டு,பட்டாணி,காலிபிளவர் உட்பட பல்வேறு வகையான மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், சில விவசாயிகள் சைனீஸ் வகை காய்கறிகள் பயிர் இடுவதிலும் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். சூப் மற்றும் துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் செலாரி,சைனீஸ் கேபேஜ்,சுக்கினி மற்றும் புருக்கோலி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக எப்பநாடு, சின்ன குன்னூர், தும்மனட்டி, மரகல், அணிக்கொரை, இடுஹட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது இது போன்ற சைனீஸ் வகை காய்கறிகள் மற்றும் கீரைகள் அதிக அளவு பயிரிடப்படுகிறது.

மலை காய்கறிகளை காட்டிலும் இவைகளுக்கு எப்போதும் ஒரு சீரான விலை கிடைப்பதால் தற்போது விவசாயிகள் சைனீஸ் வகை காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யப்படும் இந்த காய்கறிகள் மற்றும் கீரைகள் தற்போது ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.

The post சைனீஸ் வகை காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Related Stories: