வருசநாடு, செப்.22: வருசநாடு கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூலவைகை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்னர் வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயமும் செழிப்படைந்தது. இந்த நிலையில் தடுப்பணை கட்டப்பட்டது முதல் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் தடுப்பணை சிறிது சிறிதாக சேதமடைய தொடங்கியது.
தடுப்பணை சேதம் அடைவதை தடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தவிர தடுப்பணையில் இரண்டு புறமும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீர் தோட்டத்திற்குள் புகும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக வருசநாடு கிராம பொதுமக்கள் கூறுகையில், தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்து விட்டதால் அதில் நீர் தேக்கி வைக்க முடியவில்லை. இதனால் வரும் காலங்களில் விவசாயம் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருசநாடு கிராமத்தில் தடுப்பணையை முறையாக சீரமைக்க வேண்டும். இதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
The post சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
