வில்லியனூர் அருகே பயங்கரம் குடிக்க பணம் கொடுக்காததால் பெண் கொலை: கணவர் கைது

வில்லியனூர், செப். 12: வில்லியனூர் அருகே குடிக்க பணம் கொடுக்காததால் கணவனே மனைவியை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் அருகே அனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54). இவரது மனைவி கலையரசி (47). இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். தம்பதியர் கூலி வேலை செய்து வரும் நிலையில், ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனிடையே நேற்று அதிகாலை 4 மணியளவில், மதுஅருந்த பணம் இல்லாததால், ராஜேந்திரனுக்கு மனஅழுத்தம் அதிகமாகி உள்ளது. இதையடுத்து பித்து பிடித்தவர்போல் வீட்டில் இருந்துள்ளார். மகன் ராஜசேகர் மாடு பிடித்து கட்டுவதற்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் கணவன்- மனைவி இருவரும் இருந்துள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ராஜசேகர் வீட்டிற்கு வந்தபோது அவரது தாயார் கலையரசி வீட்டில் படுத்த நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விசாரித்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் குடிக்க பணம் கேட்டபோது கலையரசி தர மறுத்ததால் விரக்தியில் கலையரசியை பிடித்து தள்ளியுள்ளார். அப்போது அருகில் இருந்த அலமாரியில் கலையரசியின் பின்பக்க தலை மோதி கீழே விழுந்து இறந்துவிட்டதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

உடனே இதுபற்றி வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வேலய்யன், எஸ்ஐ வேலு தலைமையிலான போலீசார் கலையரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலையரசி மகன் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கணவர் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வில்லியனூர் அருகே பயங்கரம் குடிக்க பணம் கொடுக்காததால் பெண் கொலை: கணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: