டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு பீர் விற்பனை தட்டிக்கேட்டவரின் மண்டை உடைப்பு: பார் ஊழியர்கள் அட்டூழியம்

பூந்தமல்லி:பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பார்களில் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யடுவதாகவும், இரவு 10 மணிக்கு மேல் விற்கப்படும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு மேப்பூர் பகுதியைச் சேர்ந்த ரகு என்பவர் சென்றுள்ளார். அப்போது பாரில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டதுடன், கூடுதல் விலைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரகு பார் ஊழியர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். இதில், ரகுவுக்கும் பார் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த பார் ஊழியர்கள் ஆத்திரமடைந்து பீர் பாட்டிலால் ரகுவை தாக்கியுள்ளனர். மேலும் 5க்கும் மேற்பட்ட பார் ஊழியர் ஒன்று சேர்ந்து உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு ரகுவும் காலி மதுபாட்டில்கள், கற்களை எடுத்து வீசியுள்ளார். இந்த தகராறில் காயமடைந்த ரகுவை அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு பீர் விற்பனை தட்டிக்கேட்டவரின் மண்டை உடைப்பு: பார் ஊழியர்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: