விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கீழக்கரை தாசில்தார் நேரில் ஆறுதல்

கீழக்கரை, ஆக. 20: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி விவேகானந்த புரத்தைச் சேர்ந்த பார்வதி மற்றும் அவரது மகள் குப்பம்மாள் ஆகியோர் இரண்டு தினங்களுக்கு முன்பு சின்ன மாயாகுளம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது அரசு பேருந்து மோதி இருவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்ற வருடம் பார்வதியின் மகன் உயிரிழந்ததால் அவருக்குப் பிறந்த சதீஸ்வரி(15) கார்த்திகா (10) கப்ளீஸ்வரி (8) ஆகிய மூன்று பெண்குழந்தைகளை பார்வதி தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதே போல் குப்பம்மாள் தனது கணவரை பிரிந்து தனது தாயார் பார்வதி வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு நம்புதேவி (15) நம்பேஸ்வரி (9) பாதம் பிரியா (7) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் இருவரும் உயிரிழந்ததால் 6 குழந்தைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக தலா 2 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

The post விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கீழக்கரை தாசில்தார் நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: