முத்துப்பேட்டை, ஆக. 14: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எடையூர் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் அமுதராசு, உதவி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை ஒழிப்பது குறித்து மாணவர்களிடத்தில் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் விளக்கி பேசினார். பின்னர் அனைத்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், காவல்துறையினர் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, புகைத்தல் உங்களையும் எங்களையும் நேசிப்பவர்களையும் பாதிக்கும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பேரணி சங்கேந்தி கடைத்தெரு வரை சென்று மாணவர்கள் திரும்பினர். பேரணியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பள்ளி வளர்ச்சி குழு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post எடையூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.