விஜிபி மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கு அடியில் விஜிபி சுதந்திர அலைகள் கண்காட்சி: அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கினார்

சென்னை: சென்னை நகரில் விஜிபி மரைன் கிங்டம், வெளிநாட்டு மீன் அருங்காட்சியங்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு மீன்வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தின விழா விடுமுறையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டத்தில் நீருக்கடியே ‘விஜிபி சுதந்திர அலைகள்’ எனும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய பல்வேறு தியாகிகளை கவுரவிக்கும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு குறிப்பாக தண்டியாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற எழுச்சிமிக்க போராட்ட நிகழ்வுகளை சித்தரிக்கும் பதாகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆழ்கடலுக்குள் தேசியக்கொடியுடன் வீரர்கள் நீச்சலடிக்கும் காட்சிகள் பார்வையாளர்களை பரவசமடைய வைக்கிறது. இக்கண்காட்சி வரும் 15ம் தேதிவரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று திறந்து வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு விஜிபி நிறுவனம் ஆற்றிவரும் பங்கு மகத்தானது. விஜிபி நிறுவனத்தின் தங்கக் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா, வாட்டர் தீம்பார்க், மீன் அருங்காட்சியகம் போன்றவை உலகப் பிரசித்தி பெற்றவை. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அந்நிறுவனம் செயல்படுத்த வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் விஜிபி நிர்வாக இயக்குநா் விஜிபி ரவிதாஸ் பேசுகையில், ஒவ்வொரு விடுமுறை காலத்திலும் விஜிபி மரைன் கிங்டமில் புதுமையான காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். அவ்வகையில் மொ்மெய்ட் ஷோ, நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி உள்பட பலவற்றை குறிப்பிடலாம். இவை அனைத்தும் பார்வையார்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்று தெரிவித்தார். இதில் விஜிபி நிறுவன தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், நிர்வாக இயக்குநா் விஜிபி ரவிதாஸ், முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ், முதன்மை செயல் அதிகாரி விஜிபிஆா் பிரேம்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விஜிபி மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கு அடியில் விஜிபி சுதந்திர அலைகள் கண்காட்சி: அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: