சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் பூப்பல்லக்கு கோலாகலம்

சிங்கம்புணரி, ஜூலை 6: சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நடந்த பூப்பல்லக்கில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ஜூன் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெற்ற இத்திருவிழாவில் ஐந்தாம் நாள் திருக்கல்யாணம், ஆறாம் நாள் கழுவன் திருவிழா, ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தினமும் இரவில் பூதம், ஐந்து தலை நாகம், சிம்மம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

பத்தாம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் பூப்பல்லக்கு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சேவுகப்பெருமாள் அய்யனார் உடனான பூரணை – புஷ்கலை தேவியர் பல்லக்கில் எழுந்தருளினர். இரவு இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பூப்பல்லக்கு வைக்கப்பட்டு மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக பல்லக்கு ஊர்வலமாக வலம் வந்து காலை கோயிலை அடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடு நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் பூப்பல்லக்கு கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: