பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட்

கோபி, ஜூன் 1: விபத்து, திருட்டு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாத சேலம் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளருக்கு வாரண்ட் பிறப்பித்து கோபி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆண்டவர் நகரை சேர்ந்தவர் முருகேசன் (57). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3.8.2017 அன்று கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டை மூலவாய்க்கால் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக அந்தியூர் அருகே உள்ள பர்கூர் சுண்டப்பூரை சேர்ந்த மாதேவன் மகன் சிவா (32) என்பவர் ஓட்டிச்சென்ற வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோபி அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (75). இவர் கடந்த 24.2.2017 அன்று உப்புக்கார பள்ளம் என்ற இடத்தில் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வாணிப்புத்தூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சதீஸ் என்கிற கருப்புசாமி என்பவர் ஓட்டிச்சென்ற வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈஸ்வரமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபி அருகே உள்ள டி.ஜி.புதூர் நேரு நகரை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சங்கர் (31). கூலித்தொழிலாளியான சங்கர் கடந்த 29.3.2019 அன்று வீட்டின் முன்பு அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அங்கு பைக்கில் அரசூர் அருகே உள்ள இண்டியம்பாளையம் சின்னகரட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் முனியப்பன் என்கிற கார்த்திக் (19), கே.என்.பாளையம் அருகே உள்ள செல்லிபாளையம் புதூரை சேர்ந்த அய்யப்பன் மகன் கார்த்தி என்கிற கார்த்திகேயன் (18), கே.என்.பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் மாது என்கிற மாதவன் என்கிற கமலேஷ்வரன் (18) ஆகியோர் வந்தனர். அவர்கள் சங்கரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினர். சங்கர் அளித்த புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். அவர் தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்குகள் கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த 3 வழக்குகளிலும் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு, சாட்சி விசாரணைக்கு ஆஜராக கூறி வாரண்ட் பிறப்பித்து ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி உத்தரவிட்டார்.

The post பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் appeared first on Dinakaran.

Related Stories: