பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள மாட்டுச் சந்தைக்கு வாரந்தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இருப்பினும், இந்த மாதம் துவக்கத்தில் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், பெரும்பாலான மாடுகள் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் முதல் சந்தைக்கு மீண்டும் மாடுகள் வரத்து அதிகரிக்க துவங்கியது. நேற்று நடந்த சந்தை நாளின்போது, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

சுமார் 2800க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. கடந்த சில வாரமாக கேரள பகுதியில் மாடு விற்பனை அதிகரிப்பால், பொள்ளாச்சிக்கு மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்தது. இதற்கிடையே, வரும் ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், பல்வேறு வியாபாரிகள், இப்போதே மாடுகளை அதிகளவு வாங்கி சென்றனர். இதனால், நேற்று வெளியூர் வியாபாரிகள் அதிகமாக இருந்ததுடன், மாடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. கடந்த வாரம் சுமார் ரூ.1.70 கோடிக்கு மாடு வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் நேற்று வியாபாரிகள் வருகை வழக்கத்தைவிட அதிகரிப்பால் ரூ.2 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: