லேப்டாப், பை வழிப்பறி என பொய் புகார் நீதிமன்றத்தில் ஜெர்மன் வாலிபரை ஆஜர்படுத்த போலீஸ் நடவடிக்கை

சென்னை: லேப்டாப், பைகளை வழிப்பறி செய்துவிட்டதாக பொய் புகார் அளித்த ஜெர்மன் வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரைட்ரிச் வின்சென்ட் (23). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர், கடந்த 24ம்தேதி சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில், வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு நடந்து சென்றுள்ளார். மேட்டுக்குப்பம் சாலை ஜெயராம் நகர் பகுதியில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 லேப்டாப் மற்றும் 2 பைகளை பறித்து சென்றதாக, வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், ஜெர்மன் வாலிபர் பை ஏதும் கொண்டு வரவில்லை. அவரிடம் யாரும் வழிப்பறி செய்யவில்லை. போதையில் திருவான்மியூரில் உள்ள ஓட்டல் அறையில் பை, லேப்டாப்களை வைத்துவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பிரைட்ரிச் வின்சென்ட்டை எச்சரித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், புகார் அளித்த நபர் ஜெர்மனை சேர்ந்தவர் என்பதால், அவர்மீது 188 டபிள்யூ என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post லேப்டாப், பை வழிப்பறி என பொய் புகார் நீதிமன்றத்தில் ஜெர்மன் வாலிபரை ஆஜர்படுத்த போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: