நிலவுக்கு செல்லும் சந்திராயன்-3 ராக்கெட் ஜூலையில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

சென்னை: ‘‘நிலவுக்கு செல்லும் சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும்’’ என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஜி.எஸ்.எல்.வி-எப் 12 ராக்கெட் என்.வி.எஸ்-01 என்கிற வழிகாட்டும் வகை செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதன் பின்னர் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: இஸ்ரோ மூலமாக ஜி.எஸ்.எல்.வி – எப் 12 ராக்கெட் மிக வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. நாங்கள் திட்டமிடப்படி மிக துல்லியமாக புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஜி.எஸ்.எல்.வி எப்12 செலுத்தப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள என்.வி.எஸ் -01 செயற்கைக்கோள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் செயற்கைக்கோளாகும். இதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம் மற்றும் நேர தகவலை துல்லியமாக வழங்க முடியும். மேலும், என்.வி.எஸ் 01 செயற்கைக்கோள் மூலமாக வரும் தகவல்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மிஷனில் அடுத்தடுத்து இன்னும் 4 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக அனுப்புவோம். இதேபோல, விரைவில் பருவ நிலை மாறுபாடுகள் குறித்து கண்காணிக்க அடுத்ததாக இன்சாட் – 3 டி.எஸ் செயற்கைகோளை அனுப்ப உள்ளோம். வரக்கூடிய மாதங்களில் ஜி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி மார்க் 3, ககன்யான் திட்டம், எஸ்.எஸ்.எல்.வி, உள்ளிட்ட திட்டங்கள் வர உள்ளன. ககன்யான் திட்டத்திற்கு தேவையான பாராசூட், இருக்கை, மற்றும் பயணி அமைப்பு சோதனையில் உள்ளது.ஜூலை அல்லது ஆகஸ்டில் ஒரு திட்டத்தினை செயல்படுத்த உள்ளோம். மனிதர்கள் இல்லாமல் ஏவும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த உள்ளோம். சந்திராயன்-3 ராக்கெட் ஜூலையில் விண்ணில் ஏவப்படும்.

* குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அரசு ஒத்துழைப்பு
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. சிறிய அளவிலான ராக்கெட் ஏவுதளமாக அது செயல்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக வணிக ரீதியிலான தனியார் ராக்கெட் செலுத்துவதற்கு எதிர்காலத்தில் பயன்படும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் முடிந்து விட்டது. சிறிய அளவிலான இடம் மட்டுமே கையகப்படுத்த வேண்டியுள்ளது. கட்டுமானப்பணிக்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. கட்டுமான வேலை தொடங்கினால், குறைந்தபட்சம் 2 ஆண்டுகளில் செயல்பட தொடங்கும். இதற்கு தமிழ்நாடு அரசு சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

The post நிலவுக்கு செல்லும் சந்திராயன்-3 ராக்கெட் ஜூலையில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: