சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்

சென்னை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (23ம் தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

குறிப்பாக, சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தமிழர்கள் சார்பில் நடத்திய நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்றார். அங்கு சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழில் அதிபர்களை சந்தித்து சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25ம் தேதி மாலை விமானம் மூலம் ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையம் சென்றார்.

அவருடன் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் மற்றும் அரசு உயரதிகாரிகள் குழுவும் உடன் சென்றனர். ஜப்பானில் 6 நாட்கள் தங்கியிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு, தொழில் அதிபர்கள், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்றார். அப்போது, சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தரும்படியும், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்தார்.

ஜப்பான் நாட்டின் புல்லட் ரயிலில் ஏறி முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார். அதேபோன்று புல்லட் ரயில் சேவையை இந்தியாவிலும் தொடங்க வேண்டும் என்றும் தனது ஆசையை முதல்வர் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் நாட்டின் சுற்றுப்பயணத்தில், நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டை சார்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டின் 9 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (31ம் தேதி சென்னை திரும்புகிறார்.

The post சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார் appeared first on Dinakaran.

Related Stories: