முக்கனிகளில் ஒன்றை சுவைக்க தயாரா; சிறுமலை சந்தையில் தொடங்கியது பலாப்பழ சீசன்: நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை சந்தையில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் அருகே சிறுமலைப் பகுதி உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் மலை சார்ந்த விவசாயம் ஆகும். இந்த சிறுமலையில் வாழையும், பலாவும் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும், இந்த மலைகளில் மிளகு, காப்பி, பலா, வாழை, எலுமிச்சை, அவரை, பீன்ஸ், சௌசௌ ஆகியவையும் பயிரிடப்படுகிறது.

தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால், சிறுமலை பலா சந்தை கலைகட்ட துவங்கி உள்ளது. இந்த சிறுமலை பலாப்பழத்திற்கு என தனிமவுசு உண்டு. மற்ற மாவட்டங்களில் விளையும் பலாப்பழத்தை விட இங்கு விளையும் பலாப்பழமானது இனிப்பும், புளிப்பும் சுவை கொண்டவை. மேலும் இப்பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இது தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிம சத்துக்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இந்தப் பலாபழங்களை போட்டி போட்டுக் கொண்டு ஏல முறையில் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த முறை சீசன் துவங்கி உள்ள நிலையில், இந்த சந்தையில் ஏலமுறையில் பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஏலம் விடும் பலாப்பழங்கள் உருவத்திற்கும் அதனுடைய சுலையின் பருமனை பொறுத்து ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் பழத்திற்கு எற்றாற்போல ஒரு பழம் ரூ.500 முதல் விலைபோகிறது. சீசன் துவக்கத்திலேயே பலாப்பழங்கள் விலை உயர்ந்து விற்கப்பட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post முக்கனிகளில் ஒன்றை சுவைக்க தயாரா; சிறுமலை சந்தையில் தொடங்கியது பலாப்பழ சீசன்: நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: