மதுரை, மே 25: கோவில்பட்டி திட்டங்குளத்தில் அனுமதியின்றி செயல்படும் தினசரி சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி தினசரி சந்தையில் இருந்த 250 கடைகளை அகற்றி விட்டு புதிய கடைகளை கட்ட நகராட்சி முடிவெடுத்துள்ளது. தற்போது புதிய பேருந்து நிலையம் அருகே தற்காலிக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிலர் கோவில்பட்டி திட்டங்குளம் பகுதியில் பட்டா நிலத்தில் கடைகள் அமைத்து தினசரி சந்தை நடத்துகின்றனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. எனவே, திட்டங்குளம் தினசரி சந்தைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர், திட்டங்குளத்தில் செயல்படும் தினசரி சந்தைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் மனுவிற்கு கோவில்பட்டி நகராட்சி ஆணையர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 26க்கு தள்ளி வைத்தனர்.
The post கோவில்பட்டி திட்டங்குளத்தில் அனுமதியின்றி செயல்படும் தினசரி சந்தைக்கு தடை appeared first on Dinakaran.