தூத்துக்குடி, மே23: எட்டயபுரம் அருகே 1300 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் எட்டயபுரம்-விளாத்திகுளம் பைபாஸ் சந்திப்பில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் தலா 50 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் மொத்தம் 1300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் கோவில்பட்டி பூரணம்மாள் காலனியை சேர்ந்த சேர்மக்கனி மகன் சுந்தர் என்ற கார்த்திக்(21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, விருதுநகர் மாவட்டத்தில் பன்றி பண்ணைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 1,300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கார்த்தி என்ற பாம்பு கார்த்திக், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
The post எட்டயபுரம் அருகே காரில் கடத்திய 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.