நெல்லை மாவட்ட கலை மன்றம் மூலம் சிறந்த 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள் கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

நெல்லை, மே 6: ெநல்லை கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கவும், 2021-2022 முதல் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த ஆணையின்படி 2002-2003ஆம் ஆண்டு முதல் 2021-2022ம் ஆண்டு வரையில் நெல்லை மாவட்டத்தில் 105 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன. கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் நெல்லை மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக, நெல்லை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது.

எனவே, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன், அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன், குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி, 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி, 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி, 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கக் கூடாது. கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதிதாக கண்டிப்பாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்), நெல்லை – 7 என்ற முகவரிக்கு 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை மாவட்ட கலை மன்றம் மூலம் சிறந்த 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள் கலெக்டர் கார்த்திகேயன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: