உத்தமபாளையத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட புதிதாக குளங்களை உருவாக்க வேண்டும்: அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

 

உத்தமபாளையம், மே 3: தேனி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை ஊராட்சிகளில் அதிகம் இருந்தாலும், இதனை பராமரிப்பது குறைவாகவே உள்ளது. உத்தமபாளையம் அதிகமான விவசாயிகள் வாழக்கூடிய ஊராக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு பெய்யக்கூடிய மழை நீர் வீணாகிறது. குறிப்பாக தென்மேற்குபருவமழை, வடகிழக்குபருவமழை, கோடை மழை காலங்களில் பெய்யக்கூடிய மழையினால் வரக்கூடிய தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது.

இதனால் விவசாயிகள் உத்தமபாளையத்தில் குளத்தை வெட்டி அதனை சேகரிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். உத்தமபாளையத்திற்கு பக்கத்தில் உள்ள ஊர்களில் குளங்கள் உள்ளன. குறிப்பாக ராமசாமிநாயக்கன்பட்டி -கோகிலாபுரம் இடையே தாமரைக்குளம் உள்ளது. உ.அம்மாபட்டியில் குப்புசெட்டி குளம் உள்ளது. அனுமந்தன்பட்டியில் வள்ளியங்குளம் உள்ளது. ஆனால் உத்தமபாளையத்திற்கு என தனியாக குளம் இல்லை. இதனால் நிலத்தடிநீர்மட்டம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மழை முன்பு போல் இல்லாதநிலையில் தண்ணீரை சேகரிக்கும் முறையும் குறைந்து வருகிறது.

எனவே உத்தமபாளையத்தை மையப்படுத்தி ஊருக்கு மேற்குபுறமாக குளத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து உத்தமபாளையம் பொதுமக்கள் கூறுகையில், உத்தமபாளையத்தில் விளைநிலங்கள் அதிகம் உள்ள கோம்பை மலையடிவாரம் செல்லும் பாதைகளை மையப்படுத்தியும், 18ம் கால்வாய் செல்லக்கூடிய கால்வாய்களை மையப்படுத்தி புதிதாக குளம் வெட்டுவதற்கு தமிழக பொதுப்பணித்துறை ஆய்வுசெய்யவேண்டும் என்றனர்.

The post உத்தமபாளையத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட புதிதாக குளங்களை உருவாக்க வேண்டும்: அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: