குடும்பதலைவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கல்வி ஒன்று தான் வாழ்க்கையின் தரத்தையே மாற்றி அமைக்கும்: மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

 

கும்பகோணம்: கும்பகோணம் தாலுகா, அண்ணலக்ரஹாரம் ஊராட்சி, அரியத்திடலில் உள்ள சமுதாயக்கூட கட்டிடத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம், குடும்ப தலைவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கும்பகோணம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முகப்பிரியா வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழுவின் வழக்கறிஞர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜெசிந்தா மார்ட்டின் பேசுகையில்,கொரோனா காலத்தில் கிராம மக்களின் வாழ்க்கை முறையை மாநகரத்தில் உள்ள அனைவரும் பின்பற்ற தொடங்கியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தான் மாநகரத்தில் பிறந்து வாழ்ந்திருந்தாலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறினார். மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் அவசியம் பற்றியும், குடும்ப சொத்தில் பெண்களுக்கு உள்ள உரிமைகள் பற்றியும், கல்வி ஒன்று தான் நமது வாழ்க்கையின் தரத்தையே மாற்றி அமைக்கும் என கல்வியின் அவசியத்தை பற்றி பேசினார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சேவைகள் குறித்த பிரசுரங்கள், சட்ட உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் வழங்கி, எந்தவித கட்டணமும் இல்லாமல் எவ்வாறு தங்களது வழக்கிற்கு வழக்கறிஞர்களை நியமிப்பது என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா, பெண்களுக்கு சட்டப்பணிகள் குழு மூலம் எவ்வாறு சேவைகள் அளிக்கப்படுகிறது என்றும், பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் பற்றியும் விவரித்து கூறினார்.

முகாம் தொடங்குவதற்கு முன்னதாக நீதிபதிகள், பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வளாகத்தின் அருகே மரக்கன்றுகள் நட்டனர். முகாமில் தலைவர் பிரேமா ராமச்சந்திரன், துணைத் தலைவர் சங்கர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட தன்னார்வலர்கள் ராஜேந்திரன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை குணசீலன் செய்திருந்தார்.

The post குடும்பதலைவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கல்வி ஒன்று தான் வாழ்க்கையின் தரத்தையே மாற்றி அமைக்கும்: மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: