அன்னவாசலில் வாலிபர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல்

விராலிமலை, ஏப்.18: அன்னவாசலில் வாலிபர் கொலையில் கொலையாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ராசு மகன் முத்துக்குமார் (30) பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ராசாத்தி என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதை ராசாத்தியின் மகன் வெற்றிவேல் என்பவர் நேரடியாக பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 13ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மகனுக்கு 3ம் நாள் காரியம் செய்வதற்கு திருச்சி மாவட்டம், மேலக்கல்கண்டார் கோட்டையில் வசித்து வரும் முருகேசன் அன்னவாசல் வந்துள்ளார். வந்த இடத்தில் வெற்றிவேல் மரணத்திற்கு முத்துக்குமார் தான் காரணம் என தெரிய வந்தது. இதில் ஆத்திரத்திரமடைந்த முருகேசன் மற்றும் அவரது உறவினர் சண்முகம், நாகராஜ், பாலாமணி(40), ராசாத்தி(38), அன்னபூரணி(33) மற்றும் 12 வயது சிறுவன் ஆகியோர் இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள முத்துக்குமார் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்று அவரை வெட்டி கொன்றனர்.

இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசாத்தி, பாலாமணி, அன்னபூரணி, 13 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து, திருச்சி மளிர் சிறையிலும், சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர். மேலும் இதில் தலைமறைவான சண்முகம், முருகேசன், நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய மற்ற மூன்று பேரையும் கைதுசெய்ய வேண்டும் என்று கோரி நேற்று காலை முத்துகுமாரின் உறவினர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் மற்றவர்களை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்த பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post அன்னவாசலில் வாலிபர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: