புகளூர் தனியார் சர்க்கரை ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா

கரூர், ஏப். 6: கரூர் மாவட்டம் புகளூர் வட்டம், புஞ்சை புகளூர் கிராம பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலையில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், தொழிற்சாலையின் இயக்கத்தினால் வெளியேறும் நுண்கரித்துகள்களாலும், கழிவுநீராலும் அருகில் உள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் வருவதை தொடர்ந்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த பகுதியில் இயங்கி வரும் சர்க்கரை ஆலையின் இயக்கத்தினால், வெளியேறும் நுண்கரித்துகள்களாலும், கழிவு நீராலும் அருகில் உள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், பொதுமக்கள் குறிப்பிட்ட வேலாயுதம்பாளையம் மற்றும் செம்மண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு வளாகங்களில் நுண்துகள்கள் படிந்திருப்பதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நிறுவன வளாகத்தில் கொதிகலன் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது, கொதிகலன் எரிபொருளாக கரும்புசக்கையுடன் நிலக்கரியும் கலந்து பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.

மேலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மிகவும் பழமையானதாக உள்ளது எனவும், அதன் உறுப்பு இயக்க பகுதிகள் அனைத்து சீராய்வு செய்யக் கூடியதாகவும் கண்டறியப்பட்டது, நிறுவனத்தினர் தற்போதைய கரும்பு அரவை காலம் என்பதால் இந்த மாத இறுதியில் முடிவடைவதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து, நிறுவனத்தினர் தங்கள் வளாகத்தில் உள்ள கொதிகலனுக்கு நிலக்கரியை மட்டுமே எரிபொருளாக பயன்படுத்திட வேண்டும். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒட்டுமொத்த உபகரணங்களையும், அதன் இயக்கம் சார்ந்த முழுமையான தணிக்கை தயாரிக்கப்பட்ட அதனை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்கள் தொடர்ந்து நிலக்கரியை மட்டும் கொதிகலனுக்கு எரிபொருளாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலட்சுமி, புகளூர் நகராட்சி தலைவர் சேகர், கமிஷனர் கனிராஜ், புகளுர் தாசில்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புகளூர் தனியார் சர்க்கரை ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா appeared first on Dinakaran.

Related Stories: