×

சிவகங்கை அருகே வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்ந்து அட்டகாசம்

சிவகங்கை: சிவகங்கை அருகே வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் போலீசார் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செக்கடியான்(38). மீன் வியபாரம் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை அருகே சாமியார்பட்டி கண்மாயில் மீன் வாங்குவதற்காக மதுரை, சிவகங்கை சாலையில் வரிச்சியூரில் இருந்து சாமியார்பட்டி நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கரும்பாவூர் விலக்கு அருகே டூவீலரில் வந்த மூன்று நபர்கள் வழிமறித்து செக்கடியான் தோளில் வாளால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.2ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்தனர்.

செக்கடியானிடம் பணம் பறித்துகொண்டிருந்த போது அந்த வழியாக காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் மத்திய பாதுகாப்பு படையில் நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகன சுந்தரேஸ்வரன்(35), இவரது மனைவி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் புவனேஸ்வரி ஆகிய இருவரும் டூவீலரில் வந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்து வழிப்பறி செய்தவர்களை தட்டிக்கேட்டுள்ளனர். கொள்ளையர்கள் அங்கிருந்து செல்வதுபோல் சிறிது தூரம் சென்றுவிட்டு பின்னர் நல்லாகுளம் பாலம் அருகே மோகன சுந்தரேஸ்வரனை வழிமறித்து அவரது கையில் வாளால் வெட்டி அவரிடம் இருந்து ஒன்றரை பவுன் செயின் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதில் புவனேஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டது.

மீண்டும் அதே மூன்று கொள்ளையர்கள் சித்தாலங்குடி அய்யனார் கோவில் அருகே மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கி டூவீலரில் வந்துகொண்டிருந்த சிவகங்கை போஸ் ரோட்டை சேர்ந்த முத்துமுனியாண்டி மகன் அரவிந்தை(23) வாளை காண்பித்து வழிமறித்த போது அவர் அச்சமடைந்து வந்த வழியே திரும்பி அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார். பின்னால் கொள்ளையர்கள் விரட்டி வந்ததால் பதட்டத்தில் டூவீலர் ஹோட்டல் விளம்பர போர்டில் மோதியது. இதில் அரவிந்த் முகத்தில் காயம் ஏற்பட்டது. கொள்ளையர்கள் மூவரும் மீண்டும் பூவந்தி நோக்கி சென்றனர். மூவரும் மாஸ்க் அணிந்து இரண்டு வாள்களுடன், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பூவந்தி, சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Sivaganga ,
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!