திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட்டன. கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 138 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவ, மாணவிகள் உட்காருவதற்கு போதுமான வகுப்பறை வசதிகள் தேவை என்ற அடிப்படையில் தற்பொழுது எம்.பி தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இப்பள்ளி மாணவ, மாணவிகளின் தேவை உணர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மாணவ, மாணவியர் அமர்வதற்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய 38 டெஸ்க், பெஞ்ச் வடிவமைப்பு கொண்ட இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் செல்லதுரை தலைமை வகித்தார். ஊராட்சித் துணைத் தலைவர் சூடாமணி, பள்ளி துணை தலைவர் சந்திரமோகன், ஆசிரியர்கள் மகாலட்சுமி, ரம்யா, அமுதா, சக்தி, ஆய்வக உதவியாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் மாணவர் இருக்கைகளை பெற்று பேசினார். தமிழாசிரியர் பழனிவேலு நன்றி கூறினார்.