கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக போதை இல்லாத சமூகம் அமைப்போம். என்றும் இளைஞர்களை மீட்போம் என்ற அடிப்படையில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்திற்கு தாசில்தார் ராமசாமி தலைமை வகித்து, கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் கருணாகரன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கையெழுத்து இயக்கத்தில் போதை பழக்கத்தில் உள்ளவர்களை மீட்டெடுக்கும் வகையில் போதை இல்லாத சமூகம் அமைப்போம் என்று வலியுறுத்தி பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் ஈடுபட்டனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையெழுத்திட்டு சென்றனர். மேலும் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.