×

பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் இறந்தவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட முயற்சி பேராவூரணியில் பரபரப்பு

பேராவூரணி: பேராவூரணி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய காலதாமதமானதால் உறவினர்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டதால் மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி ஆத்தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு (35), திருமணமான இவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த பழனிவேல் நேற்று அதிகாலை தனது வீட்டருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து உறவினர்கள் பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிணவறையில் வைத்தனர். மருத்துவமனை நிர்வாகம் காலையிலிருந்து பிரேத பரிசோதனை செய்வதில் அலட்சியமாகவும், தாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் இறந்தவரின் உறவினர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்து, உடனே பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Tags : Peravoorani ,
× RELATED பேராவூரணி வாக்குச்சாவடி மையங்களில்