கோவில்பட்டி, பிப். 23: கோவில்பட்டி அருகே வீடுகளுக்கு வரி வசூல் செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மந்தித்தோப்பு சாலை, பெரியார் நகரில் சுமார் 300 குடும்பங்கள் வீடு கட்டி 10 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இதில் 150 வீடுகளுக்கு வீட்டு வரி, மின் இணைப்பு வசதி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. மீதமுளள 150 வீடுகளுக்கான வீட்டு வரி வசூல் செய்யப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு முறையாக வீட்டு வரியை வசூலித்து ரசீது வழங்கி மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கரும்பன், உதவி செயலாளர் பாபு ஆகியோர் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்கள் எழுப்பினர்.