காரியாபட்டி, செப். 30: நரிக்குடி அருகே, ஆதித்தனேந்தலில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மராமத்துப் பணி மேற்கொள்ள, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமத்தில் கடந்த 2009ல் திமுக ஆட்சியின்போது சமத்துவபுரம் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகளில் கடந்த 13 ஆண்டுகளாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போதிய பராமரிப்பு இல்லாததால் வீடுகளின் மேற்கூரை சேதம், விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குடியிருப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.