காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு அக்.12ம் தேதி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி

தஞ்சாவூர் செப். 28: காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்ட, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் அக்டோபர் 12ம் தேதி நடைபெறுகிறது என்று தஞ்சாவூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022 ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு. பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 12ம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூர், அரசர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் அக்டோபர் 12ம் தேதி நடத்தப்பட உள்ளன. காலை 09.30 மணிக்குத் தொடங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரு கல்லூரிக்கு ஒருவர் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிக்கு ஒருவர் என அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் 3ம் பரிசு ரூ. 2 ஆயிரம் என்ற வகையில் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர்தனியாகத் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் 3ம் பரிசு ரூ. 2 ஆயிரம் என்ற வகையில் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

பேச்சுப்போட்டியில் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 4 தலைப்பு, கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 6 தலைப்புகளில் மாணவர்கள் தயார் செய்து வரவேண்டும். பின்வரும் தலைப்புகளில் எதேனும் ஒரு தலைப்பை போட்டியின் போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: