திருவாரூர்,ஆக.10: திருவாரூர் நகர பகுதிகளில் இருந்து வரும் 15 ஆயிரத்து 971 குடியிருப்புகளுக்கு வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியினை நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் துவக்கி வைத்தார். நாட்டின் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினையொட்டி கடந்த ஓராண்டு காலமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாக்கள் மட்டுமின்றி பொதுமக்கள் தங்களது வீடுகளில் முன்கூட்டியே அதாவது வரும் 13,14 மற்றும் 15ம் தேதிகள் என தொடர்ந்து 3 நாட்கள் தேசிய கொடியினை தங்களது வீடுகளில் பறக்க விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் இந்த தேசிய கொடியினை தைக்கும் பணியில் மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.