தஞ்சாவூர், ஆக.10: 1981ம் ஆண்டு தமிழ் ஆய்வுகளுக்கென்றே உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமான தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் மட்டுமல்லாது ஆய்வியல் நிறைஞர், முதுகலை பட்டப் படிப்பு, ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒருங்கிணைந்த முதுகலை மாணவர்களுக்கான கலந்தாய்வும் சேர்க்கையும் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, நாடகத்துறையில் பல்வேறு மாணவ மாணவிகள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டபடிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுத் தமிழ்நாடு அரசின் விதிகளுக்குட்பட்டு இனவாரி சுழற்சி முறையில் இலக்கியத்துறையில் 50 மாணவ மாணவியருக்கும், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் 50 மாணவ மாணவியருக்கும் நாடகத்துறையில் 20 மாணவ மாணவியர்களுக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.