கன்னியாகுமரி, ஜூன் 14: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன் வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் வழி வலை விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் கிழக்கு கடலோர பகுதிகளில் தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களில் இந்த தடை அமுலில் உள்ளது. இந்த தடைக்காலத்தையொட்டி கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல், துறைமுகத்தின் கரையோர பகுதிகளில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தன.