விருத்தாசலம், ஜூன் 11: விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ. பூவனூர் முடக்கு பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் வேகக்கட்டுப்பாடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் வேக கட்டுப்பாடு எதுவும் அமைக்காமல் நெடுஞ்சாலை துறையினர் சாலைப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி பாலு தலைமையில் நெடுஞ்சாலை பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 10 நாட்களில் வேக கட்டுப்பாடு அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்ததன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.