பாபநாசம், மே 26: கபிஸ்தலம் அருகே கொந்தகை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். கபிஸ்தலம் அருகே கொந்தகை ஊராட்சியில் 2019-20 ஆண்டுக்கான கனிமவள நிதியிலிருந்து ரூ.30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடம் திறப்பு விழா கூடுதல் கலெக்டர் காந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச்செல்வன், பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அய்யாராசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி தலைவர் மகாலிங்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், ஆகியோர் கலந்துகொண்டு ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்து பேசினர். நிகழ்ச்சியில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ரமேஷ்பாபு, ஒன்றிய பொறியாளர் சரவணன், பணி மேற்பார்வையாளர் செல்வராணி, உள்பட ஊராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.